மெகொட பொருளாதார மத்திய நிலைய துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

மெகொட பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 12ஆம் திகதி மெகொட பொருளாதார மத்திய நிலையத்திற்குள் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அவரின் உடமைகள் கொள்ளையிடப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பில் மெகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கடவட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரில்லவல பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக மெகொட பொலிஸாருக்கு அங்கு தகவல் கிடைத்துள்ளது.
அங்கு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மோட்டார் சைக்கிள், தலைக்கவசம், கத்தி, சட்டை என்பன உணவக அறை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் 39 மற்றும் 44 வயதுடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



