உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாட வினாத்தாள் மூன்று மொழிகளிலும் இரத்து! திணைக்களம் உடனடி நடவடிக்கை
தற்போது நடைபெற்று வரும் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் பகுதி வினாத்தாள் மூன்று மொழிகளிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று வெள்ளிக்கிழமை (12) அறிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை (10) விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் பகுதி வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசிந்ததாக நம்பப்படுவதால் வினாத்தாளை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் வினாத்தாள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞானப் பாடத்திற்கான இரண்டாம் பகுதிக்குரிய புதிய வினாத்தாள் நடத்தப்படும் திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பின்னர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.