இலங்கை கிரிக்கெட்டை மீட்க இதுவே கடைசி முயற்சி : அர்ஜுன ரணதுங்க!
ஜனாதிபதி தன்னை அறிந்திருப்பதால் கிரிக்கெட் இடைக்கால குழுக்களை நியமிப்பது தொடர்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
புதிய நியமனத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வந்த அவர், அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அமைச்சர் என்ற ரீதியில் தான் தோல்வியடையவில்லை என்பது ஜனாதிபதிக்கு நன்றாகவே தெரியும் எனவும் இடைக்கால கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் தனது எதிர்கால பணிகள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமைச்சரினால் வழங்கப்படும் நியமனங்களில் தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கு மாத்திரமே எனவும் தனது நியமனத்துடன், தற்போது அவுஸ்திரேலியாவில் இருக்கும் இலங்கையின் 6 முன்னாள் வீரர்களை அழைத்து, அவர்கள் எந்த நேரத்திலும் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற சுமார் 80 இலங்கை வீரர்கள் இருப்பதாகவும், எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு அவர்களின் ஆதரவைப் பெறுவோம் என்றும் அவர் மேலும் கூறினார்.
தற்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் சுற்றுலாப் பயணிகளாக மாத்திரம் இருக்க முடியாது எனத் தெரிவித்த அவர், இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு நியமனம் ஐ.சி.சி.யுடன் தொடர்புடைய விடயம் அல்ல எனவும் சுட்டிக்காட்டினார்.
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய அமைச்சரினால் சட்டரீதியாக இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் இனிவரும் ஐ.சி.சி கூட்டங்களில் பங்குபற்ற எதிர்பார்க்கவில்லை எனவும், தமக்கு பதிலாக உபாலி தர்மதாச பங்கேற்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் தேவையற்ற விடயங்களின் வருகையினால் இலங்கை கிரிக்கட் அழிந்து போனதாக கூறிய அர்ஜுன ரணதுங்க பயிற்சியாளர்கள் ஏசி அறைகளில் தங்குவதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர்கள் விளையாட்டு மைதானத்தில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், இலங்கை கிரிக்கெட்டை மீட்க இதுவே தனது கடைசி முயற்சி என்றும் கிரிக்கெட்டை மீட்பதற்காக தாம் செய்யும் காரியங்களில் வீரர்களின் ஒழுக்கம் மிக முக்கியமானது என்றும் கூறினார்.