அரசியலைத் தவிர்த்து மாவீரர்களுக்கு தொண்டாற்ற முன் வாருங்கள்! கோரிக்கை விடுப்பு
இலட்சிய கொள்கையில் தமது உயிர்களை துச்சம் என எண்ணி உயிர் தியாகங்களை செய்த எமது மானமா மாவீரர்களை நினைவு கூறுவதற்கு அல்லது அஞ்சலிப்பதற்கு அரசியலைத் தவிர்த்து முன் வாருங்கள் என முன்னாள் மாவீரர் பணி குழுவின் செயலாளரும் தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் பிரதி தலைவருமான ப.குமாரசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இந்த கார்த்திகை மாதத்தில் எமது மக்களின் நிரந்தர விடியலுக்காக தங்கள் இன்னுயிர்களை ஈந்தவர்களின் புனித மாதமாகும் எனவே இந்த காலத்திலாவது எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் அரசியல் வேற்றுமைகளைக் கடந்து உணர்வுள்ள தமிழ் மக்களாக எமது காவல் தெய்வங்களை ஒருமித்து அனுஸ்டிக வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
எனவே உணர்வுரீதியாக இந்த தார்மீக கடமையை நிறைவேற்றும் பொருட்டு கட்சி அடையாளங்களையும் தனிநபர் விருப்பு வெறுப்புகளையும் அகற்றிவிட்டு தமிழர்களாக ஒன்று கூட வேண்டியதன் அவசியத்தை நாம் நன்குணர்ந்தவர்களாக பொறுப்புடன் அனைவரும் செயற்படுவதன் மூலம் தமிழர்கள் அரசியல் கருத்துக்களில் வேறுபட்டிருந்தாலும் அவர்களின் ஆழ்மனது மாவீர தெய்வங்களின் கனவுகளோடும் அவற்றை நோக்கிய எண்ணங்களோடும் தொடர்கிறது என்பதனை உலகிற்கு ஒரே குரலில் சொல்வதற்கு கடமைப்பட்டிருக்கிறோம்.
எனவே மாவீரர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு ஒன்றாக பொறுப்புடன் செயற்படுவோம்.
உன்னதமானவர்களின் ஆன்மாவின் வழிநடத்தலில் இலட்சிய பயணத்தை தொடர்வோம் என மேலும் கருத்து தெரிவித்தார்.