பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட நால்வருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள கட்டளை!
திஸ்ஸ விகாரையில் நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் எவ்வித சேதமோ, அல்லது ஆபத்தோ ஏற்படக்கூடாது என மல்லாகம் நீதிமன்றினால் கட்டளையிடப்பட்டுள்ளது.
திஸ்ஸ விகாரையில் கஜினமகா உற்சவம் நாளை (06.11) நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதன்போது சட்டதரணிகளான காந்தீபன், சுகாஸ், மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான பொன்னம்பலம் கஜேந்திரகுமார், செல்வராஜா கஜேந்திரகுமார் ஆகியோரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பில் மல்லாகம் நீதிமன்றத்தில் தமிழ், சிங்கள மக்களிடையே இனவாதத்தினை தூண்டக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும், குற்றவியல், நடைமுறைச்சட்டக்கோவையின் பிரிவு 106இன் கீழ் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தக்கூடாது என்ற கட்டளையினை வழங்குமாறும் பலாலி பொலிஸாரினால் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்பம் மற்றும் அறிக்கை என்பவற்றில் கவனம் செலுத்தி 06.11.2023 ஆம் திகதியன்று திஸ்ஸ மகா விகாரைக்கு அண்மையில் சொத்துக்களுக்கோ அல்லது ஆட்களுக்கோ ஆபத்துக்கள் எவையும் ஏற்படக்கூடாது என நீதிமன்றத்தினால் கட்டளையிடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை அனுபவிக்கையில் அமைதிக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையிலோ, அல்லது சொத்துக்களுக்கோ, அல்லது ஆட்களுக்கோ, பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.