நினைவேந்தலிற்காக முள்ளிவாய்க்கால் மண் தயார் நிலையில்: அனைத்து மக்களையும் பங்கேற்குமாறு அழைப்பு
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூரும் வகையில், நாளைய தினம்(18) நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்கும் வகையில் முள்ளிவாய்க்கால் மண் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர எந்தவொரு தடையும் இல்லையென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்த நிலையில், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் அடாவடிகள் மற்றும் நெருக்கடிகள் இன்றி இந்த ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக தென்படுகிறது.
இதுவரை அங்கு இராணுவ பிரசன்னமற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய இன்று மாலை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நாளைய நினைவேந்தலுக்கான ஆயத்தப் பணிகள் இடம்பெற்றன.
இதேவேளை முள்ளிவாய்க்காலில் நாளைய தினம் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில் வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து மக்களையும் பங்கேற்குமாறு வடகிழக்கு முள்ளிவாய்க்கால் பொது கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
வடகிழக்கு முள்ளிவாய்க்கால் பொது கட்டமைப்பைச் சேர்ந்த அருட்தந்தை லியோ ஆம்ஸ் ஸ்ரோங் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.