திருகோணமலையில் நடைபெற்ற கிழக்கு மாகாண இலக்கிய விருது விழா
திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் மங்களகரமாக கிழக்குமாகாண இலக்கிய விருது விழா கிழக்கு மாகாண கல்வி தகவல் தொழில்நுட்பக்கல்வி முன் பள்ளிக்கல்வி விளையாட்டு பண்பாட்டலுவல்கள் இளைஞர் விவகாரம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஆரம்பமானது.
இரம்மியமான தமிழ், முஸ்லிம், சிங்கள கலாசாரங்களை பிரதிபலிக்கும் படங்களுடன் சிறப்பு நிகழ்வாக மட்டக்களப்பு வின்சன்ட் உயர் மகளிர் கல்லூரி மாணவர்களின் நாட்டிய நாடகமும் நிகழ்வுக்கு மெருகூட்டியது.

இலக்கிய விருதுகளைப் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட கிழக்குமாகாண ஆளுனர் பேராசிரியர் ஜெயந்தலால் ரட்ணசேனவும் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கே.குணநாதன் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் மேனகா புவிக்குமார் ஆகியோர் இணைந்து விருதுகளை வழங்கி வைத்தனர்.
ஆரம்பத்தில் 20 இளம் கலைஞர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில் தமிழக பிரபல தொலைக்காட்சி சரிகம போட்டி நிகழ்ச்சியில் பிரகாசித்து வரும் சபேசனுக்கான விருதை அவரின் பெற்றோர் பெற்றுக் கொண்டனர்.
அடுத்து 15பேருக்கு வித்தகர் விருது வழங்கி வைக்கப்பட்டது. மேலதிகமாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு மட்டுமே பல்துறை வித்தகர் விருது வழங்கி வைக்கப்பட்டது விசேட அம்சமாகும்.

பெரியகல்லாறைச்சேர்ந்த வி.கே.ரவீந்திரனும். (ரவிப்ரியா) மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த த.ஜவ்பர்கான் ஆகிய இருவருமே அந்த விருதுகளைப் சுவீகரித்து மட்டு மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்கள் இருவருமே மாவட்டத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர்களாக இருந்து அத்துறையில் தடம்பதித்து சமூகத்தில் நன்மதிப்பை பெற்று விருதுகளும் வென்றவர்கள். அத்துடன் இலக்கியப் பரப்பிலும் பொது சேவைகளிலும் தனியான பங்களிப்பைச் செய்தவர்கள். மேலும் கிழக்கில் வெளியான 11 சிறந்த நூல்கள் தெரிவுசெய்யப்பட்டு நூலாசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
(வீடியோ இங்கே )