தமிழ்நாடு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ்
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் ஒரு டீக்கடை முன்பு நின்று கொண்டிருந்தோர் மீது 3 மோட்டார் சைக்கிள்களில் 9 பேர் கொண்ட மர்ம கும்பல் மதுபோதையில் வந்து, திடீரென பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.
பின்னர் சாலையில் கண்ணில் தென்பட்டவர்களை கொடூரமாக அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவத்தில் மாற்றுத்திறனாளி உள்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேய உயிரிழக்க, மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நாங்குநேரியில் நடந்த கொடூர சம்பவத்தில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "நாங்குநேரியில் சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது.
வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் வன்முறையையும் சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் அடுத்த தலைமுறையின் கனவுக்குள்ளும் நீங்கா சமூக பதற்றத்தை சமூக இடைவெளியை திட்டமிட்டு உருவாக்க முயலும் அத்தனை சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு பெரும் உக்கிரத்தோடு அவர்களை அடக்கி ஒடுக்கி சிறைப்படுத்தி வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற தமிழகத்திற்கான நம்பிக்கையையும் உத்திரவாதத்தையும் உருவாக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )