கல்விசாரா ஊழியர்கள் பணிக்கு வரவேண்டும்!

நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவுள்ள இளைஞர்களின் வாழ்க்கையை மேலும் சீர்குலைக்காமல், அவர்களின் காலத்தை வீணடிக்காமல், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களையும் கடமைக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் உள்ள 17 பல்கலைக்கழகங்கள் மற்றும் 19 ஒன்றிணைந்த பட்டப்பின்படிப்பு நிறுவனங்களின் 14,600 கல்விசாரா ஊழியர்கள் 65 நாள்களாக பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் முழு உயர்கல்வித்துறையும் முடங்கியுள்ளது.
இந்நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவிருக்கும் 250,000 இளைஞர்களின் வாழ்க்கை சீர்குலைந்து, அவர்களின் காலத்தை வீணடிப்பதுதான் இதன் துயரமான பிரதிபலனாகும்.
2019 இல் கொவிட் தொற்று, 2020 இல் பொருளாதார நெருக்கடி, 2021 இல் போராட்டம் போன்றவற்றால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த மாணவர்கள், அந்த சவால்களையெல்லாம் எதிர்கொண்டு, பல்கலைக்கழகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 வீதமானோரில் உள்ளடங்கினாலும் கூட, இந்தப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தால் அவர்கள் மேலும் குழப்பமடைந்திருப்பது மிகப் பெரும் துயரம் என்றே கூற வேண்டும் என்றார்.



