அம்பாறை கடற்கரை பகுதிகளில் குவியும் கழிவுகள் : பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

அம்பாறை மாவட்ட கடற்கரையோரங்களில் அடைமழை காரணமாக பிளாஸ்டிக் மற்றும் இறந்த தாவரங்களின் கழிவுகள் அதிகளவாக தென்படுவதை காண முடிந்தது.
குறிப்பாக அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக தற்காலிகமான கால்வாய்கள் கடலை நோக்கி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெட்டப்பட்ட நிலையில் இவ்வாறான கழிவுகள் அதிகளவாக கடற்கரையில் கரை ஒதுங்கி நிறைந்து காணப்படுகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் கரையோர பகுதிகளான காரைதீவு மாளிகைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான கழிவு அடையாளங்கள் தென்பட்டுள்ளன.
இவ்வாறான கழிவு பரவலானது கரையோர மீனவர்களது மீன்பிடி தொழிலுக்கு பெரும் சிரமங்களை கொடுப்பதுடன் வலைகளிலும் சிக்கி வருகின்றன.
எனவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ்விடயத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என பாதிக்கப்பட்டமீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.



