போலி ஆவணங்களை பயன்படுத்தி 17 வயது சிறுவனை பிரித்தானிய அழைத்து செல்ல முற்பட்ட இரு பெண்கள் கைது!
கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், போலி ஆவணங்களை பயன்படுத்தி சிறுவன் ஒருவரை பிரித்தானியாவிற்கு அனுப்ப முயற்சித்த குற்றச்சாட்டில் இரு பெண்களை கைது செய்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய பெண்களில் ஒருவர் வெள்ளிக்கிழமை (26) இளைஞனை தன்னுடன் லண்டனுக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
குறித்த இளைஞன் 17 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த பெண், பிற்பகல் 1.30 மணியளவில் வருகை தந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
போலியான ஆவணங்கள் தொடர்பில் அதிகாரிகள் எழுப்பிய கேள்விக்கு முரணான பதில்களை வழங்கியதை தொடர்ந்து பொலிஸார் சிறுவனிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது குறித்த சிறுவன் தனது தாய் தன்னை அழைத்துச் செல்வதற்காக வருகை முனையத்தில் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து மூவரையும் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.