முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
4 weeks ago
முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

கொழும்பு பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.  

கொழும்பு பிராந்திய முஸ்லிம் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.  

கொழும்பு பிராந்தியத்தில் முஸ்லிம் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர். 

ஆசிரியர் வெற்றிடங்கள், வகுப்பறைகள் பற்றாக்குறை மற்றும் போதிய இடமின்மை, சிங்கள மொழியில் இஸ்லாத்தை கற்பிப்பதில் உள்ள சிரமங்கள், முஸ்லிம் சமூகம் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் முஸ்லிம் பாடசாலைகள் இல்லாமை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

ஏறக்குறைய 40,000 முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்கிறார்கள், மேலும் சிங்கள மொழியில் இஸ்லாத்தை கற்பிக்கும் திறன் கொண்ட ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. 

கொழும்பில் உள்ள 19 முஸ்லிம் பாடசாலைகளில் ஏறத்தாழ 200 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அதிபர்கள் மற்றும் அமைப்பு பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

உரிய ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தகுதியான ஆசிரியர்களை இனங்கண்டு தேவையான நியமனங்களை வழங்குமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.