ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயாராகும் கட்சி உறுப்பினர்கள்!

துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன மற்றும் தன்னை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு இன்று (30.03) எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபைக் கூட்டம் இன்று (30.03) கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து துமிந்த திஸாநாயக்க, நீக்கப்பட்ட நிலையில், மஹியங்கனை தொகுதி அமைப்பாளராக கே.பி.குணவர்தன அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டார்.
பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட லசந்த அழகியவன்னவின் இடத்திற்கு மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஹெக்டர் பெத்மகே நியமிக்கப்பட்டார்.
கட்சியின் சிரேஷ்ட உபதலைவராக இருந்த மகிந்த அமரவீர இன்று அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



