நீதி நடவடிக்கையின் கீழ் கைப்பற்றப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு!

பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ் கைப்பற்றப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வாகனங்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளுக்கு அவகாசம் வழங்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை நிராகரித்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சொத்தை கையகப்படுத்துவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உயர் நீதிமன்றத்திடம் இருந்து முறையான உத்தரவுகளைப் பெறவில்லை என பிரதிவாதி சட்டத்தரணி நீதிமன்றில் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் போதைப்பொருள் கடத்தல்காரரான மல்லாவின் சுதத் கித்சிறி என்றழைக்கப்படும் "வெலிவிட்ட சுத்தா" என்பவரின் சகோதரிக்கு சொந்தமான ஐந்து சொகுசு பஸ்கள், நவீன கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கடுவெல பொலிஸார் கைப்பற்றி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



