நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி நிதியத்தில் இருந்து வழங்கப்படும் சிறப்பு நிதி!

சிறு குழந்தைகளின் கல்லீரல் மாற்று சத்திரசிகிச்சை மற்றும் கோக்லியர் மாற்று சத்திரசிகிச்சைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
வறிய பெற்றோருக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் நாட்டின் எதிர்காலமாக விளங்கும் பிள்ளைகளின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, ராகம போதனா வைத்தியசாலையில் சிறு குழந்தைகளின் கல்லீரல் மாற்று சத்திரசிகிச்சைக்கான முன் மற்றும் பின் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு அதிக செலவினங்களை கருத்தில் கொண்டு, ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதியுதவி வழங்கப்படவுள்ளது. அதிகபட்சம் ஒரு மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை நாட்டில் வருடாந்தம் 200க்கும் அதிகமான கொக்லியர் இம்பிளான்ட் சத்திரசிகிச்சை தேவைப்படும் குழந்தைகள் பிறப்பதாக மருத்துவ பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சுமார் 4 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் சுகாதார அமைச்சினால் வைத்தியசாலைக்கு இலவசமாக வழங்கப்பட்டாலும் நோயாளர்கள் ஆறு இலட்சம் ரூபா செலவை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தீர்வாக சத்திரசிகிச்சைக்கான செலவான 600,000 ரூபா ஜனாதிபதி நிதியிலிருந்து வழங்கப்படவுள்ளதுடன், இதன்படி ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் இந்த சத்திரசிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



