செங்கடலுக்கு அனுப்பப்படும் இலங்கை கப்பல் : எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்கட்சி உறுப்பினர்கள்!
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு எதிராக செங்கடலில் பயணிக்கும் வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பதற்கான அமெரிக்கா தலைமையிலான நடவடிக்கையில் சேர இலங்கை கடற்படை தயாராகி வருவதாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் இன்று (09.01) அறிவித்தார்.
இலங்கைக் கப்பல்களை அனுப்புவதற்கான திகதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும், அவர்கள் ரோந்து செல்லும் பகுதி இறுதி செய்யப்படவில்லை என்றும் கடற்படைப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இலங்கை அரசின் இவ் நடவடிக்கைக்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். குறிப்பாக இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த தருணத்தில் 250 மில்லியன் (USD 777,000) செலவழித்து கப்பல்களை அனுப்ப வேண்டுமா என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், இலங்கையின் கப்பல்கள் ஏற்கனவே இந்தியப் பெருங்கடலில் உள்ள அதன் பரந்த கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதால், இந்த நடவடிக்கைகளில் இணைவதன் மூலம் இலங்கைக்கு கூடுதல் செலவுகள் எதுவும் ஏற்படாது என்று கூறியுள்ளார்.