ஜனாதிபதி தேர்தலுக்கு இங்கு வருவார்களாக இருந்தால் அவர்களுக்கு செருப்படி போட்டு கலைப்போம் - வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்!
ஜனாதிபதி தேர்தலுக்கு இங்கு வருவார்களாக இருந்தால் அவர்களுக்கு செருப்படி போட்டு கலைப்போம் எனவும் பாதிக்கப்பட்ட தரப்பின் மீதான பொலிசாரின் அடாவடிகளுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (06.01.2024) நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், பொலிசாரின் அடாவடித்தனத்திற்காக இந்த ஊடக சந்திப்பினை நடத்தியுள்ளோம். நேற்றையதினம் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவியை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு போராட்டம் செய்து உறவுகளை மீட்க உரிமை இருக்கின்றது. அவர்கள் ஆயுதம் ஏந்தவில்லை அகிம்சை வழியில் போராடி தங்கள் உறவுளை தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில் நேற்று ஜனாதிபதி வவுனியாவிற்கு சென்ற வேளை அவர்கள் நியாயம் கேட்க போனமுறையில் அதனை முறியடித்து பாதிக்கப்பட்ட உறவுகளை வன்மையாக அடித்து கைது செய்யப்பட்டுள்ளமையினை வன்மையாக கண்டிக்கின்றோம்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் அவர் தன்னுடைய கணவரை கேட்பது பிழையா? ஜனாதிபதியாக இருந்து அவர் அடுத்தகட்டம் ஜனாதிபதியாக வருவதற்காக ரணில் விக்கிரமசிங்க வருகின்றார் என்றால் அவர் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை சந்திக்கத்தான் வருகின்றார்.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க போவதாக வரும்போது அந்த உரிமைகளை கேட்பதற்கு எங்களுக்கு உரிமை உண்டு. வடக்கு கிழக்கில் யாருக்கு அவர் உரிமை கொடுக்கப் போகின்றார் பாதிக்கப்பட்ட தரப்புகளுக்குத்தான் உரிமை கொடுக்க வேண்டும். தமிழ் மக்களை சந்தித்து சர்வதேசத்திற்கான பதில் சொல்ல வேண்டும் என்று வந்த இடத்தில் எமது பாதிக்கப்பட்ட உறவு கணவரை 16 ஆண்டுகளாக இழந்துவிட்டு, தனது குழந்தைகளை கஸ்டப்பட்டு வளர்த்த ஜெனிற்ராவை பல தடவைகள் கைது செய்ய முயற்சி செய்து கைது செய்துள்ளார்கள்.
முன்கூட்டியே பொலிசார் தடை உத்தரவினை போடுகின்றார்கள். பொலிசார் திட்டமிட்ட முறையில் போராட்டங்களை நசுக்கவேண்டும் என்று செயற்படுகின்றார்கள். முல்லைத்தீவு மாவட்ட பொலிசார் என்னையும் தேடி ஈஸ்வரி எங்கே ஈஸ்வரி வீடு எங்கே என்று தேடி இரவு 9.45 மணிக்கு வருகின்றார்கள். நாங்கள் என்ன கடத்தல் வியாபாரம் செய்பவர்களா அல்லது கஞ்சா வியாபாரம் செய்பவர்களா எங்களை அப்படி தேடுவதற்கு.
பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு யார் வந்தாலும் நியாயம் கேட்க போவது உரிமை இந்த நியாயத்தினை தடுப்பதற்கு பொலிசிற்கு உரிமை இல்லை. பொலிசார் தமிழ் பெண்கள் மீது கை வைப்பது வன்மையான செயல். பொலிசார் தோலில் பிடிக்கின்றார்கள், கையில் பிடிக்கின்றார்கள், ஆண் பொலிசார் இவ்வாறு செய்கின்றார்கள்.
பெண்களை இழுப்பதற்கு இவர்களுக்கு உரிமை இல்லை அவ்வாறு கதைக்க ஆரம்பித்தால் பெண்களின் பிரச்சினைக்கு இவர்கள் முகம் கொடுக்கமுடியாது. பாதிக்கப்பட்டவர்கள் மீது துஸ்பிரயோகம் செய்து பெண்ணை வன்முறை படுத்துகின்றார்கள். பொலிசார் சப்பாத்து கால்களால் உதைக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட தாய்க்கு இவ்வாறு செய்வது மிகவும் ஒரு கொடுமையான விடயம்.
பொலிசாரின் அடிவாடித்தனம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். பொலிசிற்கும் எங்களுக்குமான போராட்டம் இனித்தான் வெடிக்கப் போகின்றது.
உடனடியாக வவுனியா மாவட்ட தலைவியினை விடுதலை செய்ய வேண்டும் இல்லாவிடின் தொடர்ச்சியாக பொலிசிற்கு எதிராகவே எங்கள் போராட்டங்களை முன்னெடுப்போம் தேர்தலுக்கு இங்கு வருவார்களாக இருந்தால் அவர்களுக்கு செருப்படி போட்டு கலைப்போம் உடனடியாக பாதிக்கப்பட்ட தரப்பினை விடுதலை செய்யவேண்டும்” எனத்தெரிவித்துள்ளார்.