வரவு செலவுத் திட்டம்: பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பு
பாராளுமன்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
அத்துடன், 2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வாரம் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடிய போதே இது தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாகவும் செயலாளர் தெரிவித்தார். அதற்கமைய, எதிர்வரும் 07 ஆம் திகதி செவ்வாய்கிழமை கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
மறுநாள் 08 ஆம் திகதி புதன்கிழமை காலை 10.00 மணி முதல் 10.30 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலம் மற்றும் குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகியன இரண்டாம் மதிப்பீட்டுக்காக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன் எதிர்வரும் 09 ஆம் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதனையடுத்து, 2023 ஆம் நிதியாண்டுக்கான 231.5 பில்லியன் ரூபாய் அனுமதியைப் பெறுவதற்கு 01 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு முன்வக்கப்படவுள்ளது.
மறுநாள் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தனியார் உறுப்பினர் சட்டமூலமான உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தல்) சட்டமூலம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அதன்பின்னர், தனியார் உறுப்பினர் சட்டமூலங்களான பாராளுமன்றத் தோ்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் மாகாணசபைத் தோ்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் என்பன இரண்டாம் மதிப்பீடுக்காக முன்வைக்கப்படவுள்ளது.
மேலும் வரவுசெலவுத்திட்ட விவாதம் எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், 2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாம் மதிப்பீடு எனப்படும் (வரவுசெலவுத்திட்ட உரை) பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்படவுள்ளது.
அதன்பின்னர், நவம்பர் 14 முதல் 21 வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 7 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
அத்துடன், வரவுசெலவுத்திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அதனையடுத்து, குழுநிலை விவாதம் எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை முதல் டிசம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 19 நாட்கள் இடம்பெறவுள்ளது.
அதற்கமைய, 2024 நியதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை மாலை 6.00 மணக்கு இடம்பெறவுள்ளது.