மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அழகுசாதனப் பொருட்கள் இலங்கையில் விற்பனை! வெளியான தகவல்
தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய சுகாதாரமற்ற அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு சட்டவிரோதமான முறையில் நாட்டில் விற்பனை செய்யப்படும் மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபையினர் நேற்று பிற்பகல் கொழும்பு பிடகொட்டுவ பகுதியில் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் இடம் அங்கு இனங்காணப்பட்டதுடன், விற்பனை நிலையத்திற்கு சீல் வைக்க நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
தடை செய்யப்பட்ட இந்த அழகுசாதனப் பொருட்கள் குறுகிய காலத்தில் சருமத்தை ஒளிரச் செய்யும் என்று கூறி சந்தைப்படுத்தப்படுகின்றன. எவ்வாறாயினும், அவை அங்கீகரிக்கப்பட்ட செய்முறையின்றி உற்பத்தி செய்யப்படுவதாகவும், இலங்கையில் பயன்படுத்த தடைசெய்யப்பட்ட மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களும் அவற்றில் பயன்படுத்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
பெரும்பாலான தயாரிப்புகளில் உற்பத்தியாளர், இறக்குமதியாளர் அல்லது விற்பனையாளர் குறிப்பிடப்படவில்லை. சில பொருட்களின் காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை மற்றும் சில பொருட்களின் காலாவதி தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.
சோதனையின் போது அங்கு கூடியிருந்த சிலர் விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டனர்.
இதுதொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் இன்னும் தொடர்கின்றன.
இதேவேளை அழகுசாதனப் பொருட்களை நுகர்வு செய்யும் போது தரமான கடைகளில் நுகர்வு செய்ய பொதுமக்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.