பூஜை அறையில் ஆண்கள் தீபம் ஏற்றலாமா? - தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள்!

#Hindu #ஆண்கள் #தீபம் #Temple #Tamilnews #Lanka4
Prasu
1 year ago
பூஜை அறையில் ஆண்கள் தீபம் ஏற்றலாமா? - தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள்!

பல பேர் வீட்டில் ஆண்கள், விளக்கு ஏற்றும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். 

பெண்கள் வீட்டில் இருக்கும் போது, ஆண்கள் பூஜை அறையில் தீபம் ஏற்றலாமா? என்ற ஒரு சந்தேகம் நம்மில் பலருக்கு உண்டு. 

பெண்களால் விளக்கை ஏற்ற முடியாத சூழ்நிலையில், ஆண்கள் விளக்கை ஏற்றலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை.

ஆனால், அப்படி விளக்கு ஏற்றும் போது சில விதிமுறைகளை ஆண்கள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். 

அந்த விதிமுறைகள் என்ன என்பதைப் பற்றிய இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டு பெண்களால் விளக்கு ஏற்ற முடியும் என்ற சூழ்நிலை இருக்கும் போது, கட்டாயம் பெண்கள் தான் தீபத்தை ஏற்ற வேண்டுமே தவிர, அந்த பொறுப்பை ஆண்கள் கையில் கொடுக்கக்கூடாது. 

சரி. ஆண்கள் வீட்டில் விளக்கு ஏற்றும் போது மேல்சட்டையை அணியாமல் தீபம் ஏற்ற வேண்டும். 

அதாவது பனியன் கூட போட்டுக் கொள்ளக்கூடாது. வேட்டியோ அல்லது பேண்ட் அணிந்து கொண்டு தீபம் ஏற்றலாமே தவிர, கைலி(லுங்கி) அணிந்து கொண்டு தீபம் ஏற்றுவதை தவிர்க்கவும்.

பெண்கள் எப்படி நெற்றியில் குங்குமம் வைக்காமல் தீபம் ஏற்றக்கூடாதோ, அதேபோல் ஆண்கள் நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் எதுவும் வைத்துக் கொள்ளாமல் வெறும் நெற்றியுடன் தீபம் ஏற்றக்கூடாது.

அது தவறு. நெற்றியில் ஏதாவது ஒன்றை இட்டுக் கொண்டுதான் தீபம் ஏற்ற வேண்டும்.

நெற்றியில் இட்டுக் கொண்ட விபூதியை சிறிது உங்கள் மார்பிலும் பூசிக் கொள்ளுங்கள். 

முடிந்தால் இருகைகளிலும் பூசிக்கொண்டு தீபத்தை ஏற்றி பாருங்கள்.

அதில் கிடைக்கும் ஆத்ம திருப்தியே வேறு. ஒரு முறை இந்த விதிமுறையை பின்பற்றி தீபமேற்றும் ஆண்கள், கட்டாயமாக இதை அவர்களே கடைபிடிப்பார்கள். அந்த அளவிற்கு மன அமைதி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் சில ஆண்கள் குளித்த உடன் பூஜை அறைக்கு வந்து தீபத்தை ஏற்றினால், அது மிகவும் தவறான பழக்கம்.

ஈரத்தலையோடு  தீபம் ஏற்றக்கூடாது. 

ஈரத் துண்டோடும் தீபம் ஏற்றக்கூடாது. 

ஆண்கள் கிழக்கு பார்த்தவாறு தான் தீபம் ஏற்ற வேண்டுமே தவிர, மற்ற திசைகளில் தீபம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக ஆண்கள் ஏற்றிய தீபத்தை பெண்கள் குளிர வைக்கக் கூடாது. 

ஆண்கள் ஏற்றிய தீபத்தை ஆண்கள் குளிர வைக்கக்கூடாது.

தீபம் தானாக எண்ணெய் தீர்ந்து குளிருவதில் எந்த ஒரு தவறும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் தீபம் ஏற்றும்போது கவனிக்கப்படவேண்டிய ஒரு சூட்சுமம் உள்ளது.

இதை ஆண்கள் கடைபிடித்தால் அதிகப்படியான அதிர்ஷ்டம் உண்டாகும் என்று சொல்கிறது சாஸ்திரம். 

அது என்னவென்று பார்த்து விடுவோம். 

தீபத்தை ஏற்றுவதற்கு முன்பாக, தீபத்தின் முன்பு ஒரு பூவோ அல்லது ஒரு ரூபாய் நாணயமோ அல்லது சிறிதளவு அரிசி, இவை மூன்றையும் வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

உங்கள் வீட்டில் பூ இருந்தால் பூவை வைத்துக் கொள்ளலாம். 

இல்லாவிட்டால் சிறிதளவு அரிசியை வைத்துக் கொள்ளலாம்.

அரிசி வைக்க இஷ்டம் இல்லாதவர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை கூட வைக்கலாம்.

ஆக மொத்தத்தில் இந்த மூன்று பொருளில் ஏதாவது ஒரு பொருளை விளக்கின் முன்பாக வைத்து, விளக்கை இரு கைகளாலும் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு அதன் பின்பு தீபம் ஏற்ற வேண்டும். 

இந்த முறையை மட்டும் ஆண்கள் பின்பற்றி பாருங்கள் உங்களாலேயே வித்தியாசத்தை உணர முடியும்.

தீபத்தின் முன்பு வைத்த அந்த பொருளை என்ன செய்யலாம்? 

அடுத்த நாள், பூவாக இருந்தால் காய்ந்த பூவை எடுத்து விட்டு நல்ல பூவை வைத்துக் கொள்ளலாம். 

அரிசி வைத்திருந்தால் அந்த அரிசியை எடுத்து சாப்பாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒரு ரூபாய் நாணயத்தை உங்கள் செலவிற்காக வைத்துக் கொள்ளலாம். 

எந்த ஒரு தவறும் இல்லை. அந்த தீபத்திற்கு மதிப்பு கொடுத்து நீங்கள் செய்யும் சமர்ப்பணம் தான் அந்த மூன்று பொருள்களில் ஏதாவது ஒன்று. இது ஒரு சூட்சும முறை. 

லட்சுமிகரமான தீபத்தை ஏற்றும்போது அதன் பலனை முழுமையாகப் பெறுவதற்கு நம் முன்னோர்கள் நமக்காக சொல்லி வைக்கப்பட்டுள்ள சாஸ்திரம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

இந்த முறையை ஆண்கள் மட்டும் தான் பின்பற்ற வேண்டுமா? பெண்கள் பின்பற்ற கூடாதா என்ற கேள்வி கட்டாயம் எழும். 

பெண்களும் இந்த முறையை பின்பற்றலாம் அதில் எந்த ஒரு தவறும் இல்லை. இது பல பேருக்கு தெரியாது. 

தெரிந்தவர்கள் இன்றும் இந்த பழக்கங்களை கடைப்பிடித்து தான் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆண்கள், தங்கள் குடும்பத்தை விட்டு தனியாக தங்கி இருப்பார்கள் அல்லவா! அந்த இடங்களில் ஆண்களுக்கு தீபமேற்றும் பழக்கம் இருந்தால் கூட, இந்த சூட்சம முறையினைக் கடைப்பிடிப்பதில் தவறில்லை.