கஸ்ரப் பிரதேசங்களிலுள்ள ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு உணவுகளை வழங்கிய அமெரிக்கா!

இலங்கையிலுள்ள ஏழு மாவட்டங்களிலுள்ள 835 ஆரம்ப பாடசாலைகளில் கல்வி பயிலும் 95,000 சிறார்களுக்கு புரதச்சத்து குறைநிரப்பி ஊட்டச்சத்தினை அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் வெளிநாட்டு விவசாய சேவையின் ஊடாக 2021ஆம் ஆண்டு முதல், வழங்கியுள்ளது.
பிளவுபட்ட மஞ்சள் பட்டாணி மற்றும் அலாஸ்கன் இளஞ்சிவப்பு சால்மன் ஆகியவற்றைப் பயன்படுத்தி நுவரெலியா, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு குறைநிரப்பி ஊட்டச்சத்தினை வழங்கியுள்ளது என அமெரிக்க தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார்.
அமெரிக்க அரசாங்கத்தினால் உதவிசெய்யப்படும் பாடசாலைகளில் உணவளிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை அவதானிப்பதற்காக இன்று குருஅரகம ஆரம்பப் பாடசாலைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போதே இதனை தெரிவித்தார்.
அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் வெளிநாட்டு விவசாய சேவையின் ஊடாக 770 மெட்ரிக் தொன் சத்தூட்டப்பட்ட அரிசி மற்றும் 100 மெட்ரிக் தொன் சத்தூட்டப்பட்ட தாவர எண்ணெய் என்பன அண்மையில் இலங்கையை வந்தடைந்ததாக தூதுவர் ஜுலீ சங் இன்று அறிவித்தார்.
பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலப்பகுதியில் உணவு சரக்குத்தொகுதிகளை வழங்கத் தொடங்கிய இந்த 27.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முன்முயற்சியானது இந்த ஆண்டு நிறைவடையும்.
இன்னும் பரந்த அளவில், கடந்த வருடத்தில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் இலங்கைப் பாடசாலை மாணவர்களுக்கு அமெரிக்க அரசாங்கம் உணவு உதவிகளை வழங்கியுள்ளது.



