நாட்டின் தற்போதைய நிலைமைக்கு தீர்வு காண இரண்டு முன்மொழிவுகள் கிடைத்துள்ளது - சபாநாயகர் தெரிவிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை தீர்ப்பதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களால் இரண்டு தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு புதிய ஜனாதிபதியை பாராளுமன்றத்தின் ஊடாக நியமிக்க வேண்டும் அல்லது இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பதே இரண்டு முன்மொழிவுகளாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த பிரேரணைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்பில் இடமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டாலும், அதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்பதால் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் அது சாத்தியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சில கட்சித் தலைவர்கள் வாக்களிக்க மறுத்துவிட்டனர்.