கொரோனா ஆபத்து குறைவான நாடு இந்தியா - அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மையம்

இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை முடிவுக்கு வரும் நிலை உள்ளது. இந்நிலையில், இந்தியாவை அமெரிக்கா மிகக்குறைந்த பயண ஆபத்து உள்ள நாடாக அறிவித்துள்ளது.இதுபற்றி அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையில் மேலும் கூறி இருப்பதாவது:-
இந்தியாவுக்கு பயணம் செய்வதற்கு முன் தடுப்பூசி போடப்பட்டிருப்பதையும், உங்கள் கொரோனா தடுப்பூசிகளை புதுப்பித்த நிலையில் இருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் கொரோனா தடுப்பூசிகளை நீங்கள் புதுப்பித்த நிலையில் இருந்தாலும், நீங்கள் கொரோனா தொற்று பாதிப்பு அபாயத்தில் இருக்கலாம். 2 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பொது இடங்களில் முகக்கவசத்தை சரியாக அணிய வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து தேவைகளையும், பரிந்துரைகளையும் பின்பற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவை நிலை 1 (குறைந்த ஆபத்து) நாடாக அமெரிக்கா இப்போது வைத்துள்ளது.
உலக நாடுகளை அமெரிக்கா கொரோனா ஆபத்தின் அடிப்படையில் மிக அதிக ஆபத்தான நாடுகள் முதல் குறைந்த ஆபத்து உள்ள நாடுகள் வரையில் பிரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



