இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு - 13 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமேரு எரிமலை நேற்று கடும் சீற்றத்துடன் வெடித்துச் சிதறியது. எரிமலையில் இருந்து வெளியேறிய நெருப்புக் குழம்புகள் அருகில் உள்ள கிராமங்களை சூழ்ந்தன. அப்பகுதி முழுவதும் கரும்புகை மற்றும் சாம்பல் படர்ந்துள்ளது. எரிமலையை சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறினர். எனினும் பலர் வெளியேற முடியாமல் வீடுகளில் சிக்கிக்கொண்டனர். அதிகரிக்கும் வெப்ப காற்றால் மக்கள் தவித்து வருகின்றனர்.

அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். எரிமலையை சுற்றி 5 கிமீ சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிமலை வெடிப்பிற்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். சுமார் 100 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.



