வடக்கில் நாளை காலை வரை மழை தொடரும்! மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் காணப்பட்ட ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வடக்கு மாகாணத்தின் மையத்தில் உள்ளது.
இது இன்று முற்பகல்- 11.40 மணியளவில் முல்லைத்தீவுக்கும், சுண்டிக்குளத்திற்கும் இடையில் சாளை ஊடாக நிலப் பகுதிக்குள் நுழைந்து தற்போது இரணைமடுக் குளப்பகுதியில் மையம் கொண்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவர் பேராசிரியர்.நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது இன்று மாலை அல்லது இரவு வலைப்பாட்டுக்கும் அந்தோனியார்புரத்துக்கும் இடையில் மீண்டும் கடற் பகுதிக்குள் செல்லுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தற்போது வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மிதமான மழை நாளை காலை வரை தொடரும் வாய்ப்புள்ளது.
வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகள் தொடர்ந்தும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்