புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி முதல் நாட்டின் பல பாகங்களில் மழையுடனான காலநிலை அதிகரிக்கும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையின் தாக்கம் அதிகமாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊவா மாகாணம் உட்பட நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடலில் ஈடுபடுவோர் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 - 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது தொடர்ச்சியான மழைப்பொழிவு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தகவல்களின்படி, மகாவலி ஆற்றின் மநம்பிட்டி பகுதியில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அது தற்போது 'எச்சரிக்கை' மட்டத்தை எட்டியுள்ளது. இதனால் மநம்பிட்டி மற்றும் கல்லல்லே போன்ற தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் அந்த வீதிகளைப் பயன்படுத்துவோரும் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
நிலவும் அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு மாவட்ட ரீதியாக அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் அனர்த்தம் தொடர்பான ஏதேனும் அவசர உதவிகள் அல்லது தகவல்களைப் பெற 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை எந்நேரமும் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”