150 மில்லியன் ரூபா பெறுமதியான காணியை ரவி கருணாநாயக்க அபகரித்தமை! சி.ஐ.டிக்கு வந்த அசாத் சாலி!

#SriLanka #land
Mayoorikka
5 months ago
150 மில்லியன் ரூபா பெறுமதியான காணியை ரவி கருணாநாயக்க அபகரித்தமை!  சி.ஐ.டிக்கு வந்த அசாத் சாலி!

புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்க, தனக்குச் சொந்தமான 150 மில்லியன் ரூபா பெறுமதியான காணி ஒன்றைப் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் பதிவு செய்துள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காக திங்கட்கிழமை (5) பிரசன்னமாகியிருந்தார்.

 நல்லாட்சி அரசாங்கத்தின் போது நிதியமைச்சராகக் கடமையாற்றிய ரவி கருணாநாயக்க, தனக்குச் சொந்தமான காணி ஒன்றை முறைக்கேடான வகையில் அபகரித்துள்ளதாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி குற்றம் சுமத்தியுள்ளார்.

 இந்நிலையில், இந்த மோசடி தொடர்பில் ஏற்கனவே குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளதுடன், திங்கட்கிழமை (5) இது தொடர்பான விசாரணைகளுக்காக சி.ஐ.டி. விடுத்திருந்த அழைப்பாணைக்கமைய வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்திருந்தார்.

 இதன்போது அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், "நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் அளிக்க இன்று அழைக்கப்பட்டிருந்தேன். இந்நாட்டின் முன்னாள் நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, தனக்குச் சொந்தமான காணி ஒன்றைத் முறைக்கேடான முறையில் அபகரித்தமை தொடர்பிலேயே முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளேன். அவர் நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகி, மின்சார சபைக்குப் பொறுப்பாக இருந்த காலப்பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 150 மில்லியன் ரூபா பெறுமதியான எனது காணியை, 15 மில்லியன் ரூபாய்க்குப் பெற்று மோசடி செய்துள்ளார்.

 இது குறித்து நான் ஏற்கனவே பல இடங்களுக்குச் சென்று முறையிட்டும் இழுபறிக்குள்ளானது மாத்திரமே எஞ்சியது; எந்த முன்னேற்றமும் இல்லை. நான் சிறையிலிருந்த போது காணிக்குள் அத்துமீறி நுழைந்து இந்த மோசடியைச் செய்துள்ளார்.

 எனது மனைவி வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 இது தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. எனினும், மூன்றாம் தரப்பினரைக் கொண்டு அங்கு கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரியவருகிறது. இம்முறை இடம்பெறும் விசாரணைகள் மூலம் உரிய நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்" என்றார்.

 “இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4