தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலையின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும்! சுமந்திரன்
பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அருண் ஹேமச்சந்திரா உட்பட தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பேரினவாதத்துக்கு அரசாங்கம் அடிபணித்துள்ளமையானது கோழைத்தனமானது என்றும் சாடியுள்ளது.
திருகோணமலையில் கடற்கரையில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைக்கப்படுவதற்கு அனுமதி அளித்துள்ளமை தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கேவலமாகக் காண்கிறது. நேற்று முன்தினம் அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலை பொலிஸாரினால் அகற்றப்பட்டபோது, அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்துகொள்கிறது என்று சிலர் நினைத்தார்கள்.
ஆனால் அப்படியல்ல என்பதை சில மணி நேரத்துக்குள்ளேயே அமைச்சர் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். பாதுகாப்புக்காகவே சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று மீள நிறுவப்படும் என்றும் வெட்கமில்லாமல் அறிவித்தபோதே சகல மக்களும் சமத்துவமாக நடத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசும் முன்னைய அரசுகளைப் போலவே இனவாத, சிங்கள பௌத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது.
அக்கட்சியைச் சேர்ந்த அனைத்து தமிழ் உறுப்பினர்களும், திருகோணமலை உறப்பினர் அருண் ஹேமச்சந்திரா உட்பட, உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக வலியுறுத்துகின்றது என்றுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
