இலங்கையில் முற்றுமுழுதான டிஜிட்டல் கட்சியாக மாறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி!
அடுத்த 6 மாதங்களில் புதிய, இளம் தலைமுறையினரை ஐக்கிய தேசிய கட்சியில் உள்வாங்குவதற்கான செயற்றிட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம்.
புதிய சிந்தனைகளுடனான கட்சியைக் கட்டியெழுப்புவதற்காக 6 மாதங்களுக்குள் 1000 மக்கள் சந்திப்புக்களை நடத்தவுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு செய்ய வேண்டிய அனைத்து சேவைகளையும் செய்துவிட்டார். எஞ்சியவற்றை முன்னெடுப்பதற்கு நாம் ஆயத்தமாகியுள்ளோம். ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரல்கள், கொள்கைகளுடன் நாட்டுக்கான புதிய வேவைத்திட்டமொன்றை முன்னெடுத்துச் செல்லவுள்ளோம்.
அரசாங்கத்தின் மீது குறை கூறிக் கொண்டிருக்கும் அரசியலை நாம் முன்னெடுக்கப் போவதில்லை. அடுத்த 6 மாதங்களில் புதிய, இளம் தலைமுறையினரை ஐக்கிய தேசிய கட்சியில் உள்வாங்குவதற்கான வேலைத்திட்டத்தை இன்றிலிருந்து ஆரம்பிக்கவுள்ளோம்.
'ரணிலுடன் கற்போம்’ வேலைத்திட்டமொன்றை அடுத்த மாதம் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். இளைஞர்களை ஒருங்கிணைத்து 2 மணித்தியால செயற்றிட்டமாக இது முன்னெடுக்கப்படும். இரு வாரங்களுக்கு ஒரு முறை இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 10 ஆம் திகதி இலங்கையில் முற்றுமுழுதான டிஜிட்டல் கட்சியாக ஐ.தே.க.வை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் அதற்கான தலைமைத்துவத்தை வழங்குவார். இவற்றுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளையும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் எதிர்பார்க்கின்றோம் என்றார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
