யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவை – விசேட தபால் தலை வெளியீடு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, 1850ஆம் ஆண்டு “ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை” என்ற பெயரில், அந்த காலத்திய அரசாங்க அதிபர் அவர்களால், அவருடைய நண்பர்களுடன் இணைந்து சிறிய அளவில் நிறுவப்பட்டது.
பின்னர், 1907ஆம் ஆண்டு, இவ்வைத்தியசாலைக்கு "யாழ்ப்பாணம் சிவில் வைத்தியசாலை" என்ற புதிய பெயர் வழங்கப்பட்டு, அதன் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டன. அதற்குப் பிறகு, 1956ஆம் ஆண்டு, இது "யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை" என மாற்றப்பட்டது.
1980ஆம் ஆண்டு, இவ்வைத்தியசாலை "யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை" (Jaffna Teaching Hospital) என பெயர் மாற்றம் பெற்று, அன்றிலிருந்து அதே பெயரில் தொடர்ந்தும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், எதிர்காலத்தில் "தேசிய வைத்தியசாலை" (National Hospital) என்ற அடிப்படையில் இந்த வைத்தியசாலை உயர்த்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 175 ஆண்டு சேவையை நினைவுகூர்ந்து, பல்வேறு விழாக்கள் மற்றும் நிகழ்வுகள் இவ்வைத்தியசாலையில் நடைபெற உள்ளன.
அதன் முதல் கட்டமாக, விசேட தபால் தலை (Commemorative Stamp) ஒன்று இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன், தென்னிந்திய திருச்சபை முன்னால் பேராயர் கலாநிதி ஜெபநேசன் அவர்கள் மற்றும் மதத் தலைவர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன் கௌரவ ஸ்ரீ பவானந்தராஜா கௌரவ ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ம. பிரதீபன், வைத்திய நிபுணர்கள், மருத்துவர்கள், தாதிகள் மற்றும் பிற உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர். அஞ்சல் திணைக்களத்தின் உதவி அஞ்சல் அத்தியட்சகர் நாயகம், வட மாகாண உதவி அஞ்சல் அத்தியட்சகர் நாயகம் மற்றும் அஞ்சல் துணைக் கிளை உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த விசேட தபால் தலையை வெளியிட்டனர்.
பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகளும் விழாவில் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



