கடந்த ஆறு மாதங்களில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளிற்கு பயணம்!

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஆறு மாத காலப்பகுதியில், 1,44,379 இலங்கையர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குப் பயணித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
பெண் தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில், ஆண் தொழிலாளர்கள் இந்த காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்லும் அளவு குறிப்பிடக்களவில் அதிகரித்துள்ளதுடன் இந்த காலப்பகுதியில் 88,684 ஆண் தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைக்காக சென்றுள்ளனர்.
அதே நேரம் இந்த 6மாத காலத்துக்குள் 55,695 பெண் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளனர்.
இலங்கை தொழிலாளர்கள் பெரும்பாலானோர் வேலைவாய்ப்பிற்காக குவைட் நாட்டுக்கே சென்றுள்ளதுடன் அதன் எண்ணிக்கை 38,806 ஆகும். அதற்குப் பின்னர், 28,973 தொழிலாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிற்கும், 21,958 பேர் கட்டார் நாட்டிற்கும் வேலைவாய்ப்பிற்காக இந்த காலப்பகுதியில் சென்றுள்ளனர். சம்பிரதாய மத்திய கிழக்கு நாடுகளை தவிர்ந்து கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இலங்கை தொழிலாளர்கள் அனுப்பப்டுவதில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் பிரகாரம் ஜப்பான் நாட்டுக்கு 6073 பேரும் தென்கொரியாவுக்கு 3134 பெரும் தொழில் நிமித்தம் வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர்.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் இருந்துவரும் இலங்கையர்கள் 3.73 பில்லியன் டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளனர். கடந்த வருடத்தில் முதல் 6 மாதங்களில் வெளிநாட்டு தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பிய வெளிநாட்டு செலாவணியின் அளவு 3.14 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இதனுடன் ஒப்பிட்டால், 2025 ஆம் ஆண்டு வெளிநாட்டு செலாவணி கிடைப்பது 18.9வீதம் அதிகரித்துள்ளது. மேலும், 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மாத்திரம் 635.7 மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிமாற்றம் இலங்கை தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு, 2025 ஆம் ஆண்டில் மொத்தமாக 7 பில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிமாற்ற வருவாயை நாடு பெற்றுக்கொள்ளும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



