சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று!
பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (21.03) நடைபெறவுள்ளது.
சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்று நேற்று (20.03) வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்தது.
ஆனால் விவாதத்திற்கு மற்றொரு நாள் அவகாசம் வழங்க நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு முடிவு செய்த நிலையில், இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதன்படி இன்று மாலை 4.30 மணிக்கு விவாதம் தொடர்பான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இதேவேளை, உலக வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் வொஷிங்டனுக்கு சென்றிருந்த அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று நாடு திரும்பினார்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பில் பங்கேற்குமாறு ஜனாதிபதி தெரிவித்ததையடுத்து தான் தனது விஜயத்தை இரத்து செய்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.