ஒக்சிசன் கொள்வனவிற்காக வழங்கப்பட்ட நிதியில் தரம் குறைந்த மருந்து கொள்வனவு: ஹெகலியவின் தில்லுமுல்லு அம்பலம்

ஒக்சிசன் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்தி தரம் குறைந்த மருந்து கொள்வனவு செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
ஒக்சிசன் கொள்வனவிற்காக வழங்கப்பட்ட 14.5 மில்லியன் ரூபாயினை தரம்குறைந்த இம்யுனோகுளோபுலின் ஊசியை கொள்வனவு செய்வதற்காக குறிப்பிட்ட விநியோகஸ்தரிடம் சுகாதார அமைச்சு வழங்கியுள்ளதாக பிரதிசொலிசிட்ட ஜெனரல் லக்மினி கிரிஹாகம மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சராக பணியாற்றியவேளை 8வது சந்தேகநபர் மருந்து தட்டுப்பாடு காரணமாக நாட்டில் சுகாதாரதுறை வீழ்ச்சியடையும் என தெரிவித்து அவசரஅவசரமாக மருந்துகளை கொண்டுவருவதற்காக சில கட்டுப்பாடுகளை ஏன் தளர்த்தினார் என்பது குறித்து விசாரணைகளை சிஐடியினர் முன்னெடுத்துள்ளனர் எனவும் பிரதிசொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் உள்ள கையெழுத்துக்களுடன் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் கையெழுத்துக்கள் பொருந்துகின்றனவா என ஆராயுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



