உடுப்பிட்டி மதுபானசாலை மீள திறப்பு: எதிர்த்து கடையடைப்புடன் மாபெரும் போராட்டம்
யாழ். வடமராட்சி உடுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று காலை உடுப்பிட்டி சந்தியில் இருந்து ஆரம்பித்து பேரணியாக சென்று கரவெட்டி பிரதேச செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், இது இரு குடும்பம் சார்ந்த பிரச்சனை அல்ல அனைத்து மக்களின் பிரசனை, வேண்டாம் வேண்டாம் மதுபான சாலை வேண்டாம், பூட்டு பூட்டு மதுபானசாலையை பூட்டு, மக்கள் குடியிருப்புக்குள் மதுபானசாலை வேண்டாம், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரே இதற்கு நீதி வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பகுதியில் மதுபானசாலைகள் மீள திறக்கப்படுவதனால் தொடர்ந்தும் பாரிய சிரமங்களை பிரதேச மக்கள் எதிர்நோக்கியுள்ளதாக இதன்போது விசனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மதுபானசாலை திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உடுப்பிட்டியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது.
அத்துடன் போராட்டத்தின் இறுதியில் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறியப்படுத்தும் வகையில் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
