IMF இன் இரண்டாவது கடன் தவணை மற்றும் உலக வங்கி வழங்கும் பணமும் இழக்கப்படும் அபாயம்!
VAT திருத்தச் சட்டமூலம் இன்று (11.12) நிறைவேற்றப்படாவிட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை மற்றும் உலக வங்கி வழங்கும் பணமும் இழக்கப்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வட் வரி திருத்தச் சட்டமூலம் நேற்று (10.12) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவிருந்த போதிலும் கோரம் இல்லாததால் சபையின் பணிகள் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டன.
சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் சபைத் தலைவர் சுசில் பிரேமஜயந்த, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க போன்ற அமைச்சர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்து அதற்கான சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அறிவித்தனர்.
அதன்படி குறித்த சட்டமூலம் இன்று (11.12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் சபையின் ஆரம்ப நிகழ்வுகளின் பின்னர் இந்த விவாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
குறித்த காலத்திற்குள் வாய்மொழி பதில்கள் வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும், இதன்மூலம் தமக்கு அனுப்பப்பட்ட கேள்விகளை நிறைவு செய்ய முடியும் என நம்புவதாகவும், சபையின் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இதேவேளை, இன்று காலை 8.30 மணிக்கு ஆளும் கட்சியின் கூட்டத்தை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், VAT திருத்தச் சட்டமூலம் தொடர்பில் எதிர்கட்சி அரசியல் கட்சிகள் பாராளுமன்றத்தில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற நிலையில், இந்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டது.
இதேவேளை, வட்வரி திருத்தச் சட்டமூலத்தை முறையான விவாதம் நடத்தாமல் நிறைவேற்ற அனுமதிக்கப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.