இறந்த இளைஞனுக்கு புகையிரத ஊழியர்களே பொறுப்பேற்க வேண்டும்: அத்தியாவசிய சேவையாகின்றது ரயில்வே

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தின் கூரையில் ஏறிய இளைஞன் புகையிரத ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பின் காரணமாக ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புகையிரத வேலைநிறுத்தம் காரணமாக பயணிக்க ரயில் இல்லாத காரணத்தினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் இந்த மரணத்திற்கு போராட்டக்காரர்கள் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புகையிரத ஊழியர்கள் சிலரே சட்டவிரோதமாக நடந்து கொள்கின்றனர். இதன் காரணமாக இன்று நள்ளிரவு முதல் புகையிரத சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காகவும், வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிக்காத பதினெட்டாயிரம் சாதாரண ரயில்வே ஊழியர்களுக்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.



