தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கிய ரயில் ஊழியர்கள் : பல ரயில்கள் இரத்து!

ரயில் இன்ஜின் இயக்க பொறியியலாளர்கள் சங்கம் நேற்று (11.09) நள்ளிரவு முதல் பல ரயில் நிலையங்களில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம்.சேனாநாயக்க தெரிவித்தார்.
"ரயில்வே இன்ஜின் டிரைவர் கிரேடுக்கு பல ஆண்டுகளாக ஊதியக் குறியீடு இல்லாததால், எங்கள் தரம் தொடர்பான பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இதனால் அனைத்தும் முடங்கியுள்ளன.
இந்நிலையில் இது குறித்து ஜனாதிபதி, பிரதமர், போக்குவரத்து அமைச்சர் மற்றும் புகையிரத பொது முகாமையாளர் ஆகியோருக்கு எமது சங்கம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிவித்தது. இருப்பினும் உரிய பதில் கிடைக்கவில்லை.
ஆகையால் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. எதிர்காலத்தில் பதில் கிடைக்காவிட்டால் அனைத்து ஓட்டுனர்களும் ஈடுபடுத்தப்பட்டு தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதேவேலை தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று (12.09) காலை பல ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், கொழும்பில் இருந்து இயக்கப்படவிருந்த பல குறுகிய ரயில் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



