எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் லஞ்சம்: விசேட பாராளுமன்ற குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலுக்கு எதிரான வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதற்காக 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக பெற்றுக்கொண்டமை தொடர்பில் விசேட பாராளுமன்ற குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பது முக்கியமானது என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான குழுவொன்றை நியமிப்பதன் மூலம் சம்பவத்தின் மூலகாரணங்கள் அனைத்தும் வெளிவரும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமாக சட்டத்தரணி சந்திம வீரக்கொடி உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் இந்த சம்பவம் தொடர்பில் விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு சபாநாயகரிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதேவேளை, கடந்த 25ஆம் திகதி, லஞ்சம் பெற்ற நபர் பற்றிய தகவலையும், அவரது முகவரி மற்றும் கணக்கு இலக்கத்தையும் பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர் வெளியிட்டார்.
அத்துடன், எக்ஸ்பிரஸ் பேர்ல் லஞ்ச சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.



