குற்றங்களுக்குப் பொறுப்பேற்காத இலங்கை அரசு எப்படி சர்வதேச நிதிகளுக்குப் பொறுப்பேற்க முடியும்- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

சர்வதேசக் குற்றங்களுக்குப் பொறுப்பேற்காத கொள்கையை கொண்டுள்ள இலங்கை அரசு எப்படி சர்வதேச நிதிகளுக்குப் பொறுப்பேற்க முடியும் என்று நாடு கடந்த தமிழீழு அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தநிலையில் மனித உரிமைகள் பாதுகாப்பு, மத சுதந்திரம் அல்லது தமிழர்களுக்கு எதிரான சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்புக் கூறுதல் தொடர்பான நிபந்தனைகள் ஏதுமின்றி, சர்வதேச நாணய நிதியம், இலங்கை அரசுக்கு 3 பில்லியன் டொலரை கடனாக வழங்கியுள்ளது.
இது நெறிமுறையற்ற மற்றும் நியாயமற்ற ஏற்பாடு என்று நாடு கடந்த தமிழீழு அரசாங்கத்தின் பிரதானி விஷ்வநாதன் ருத்திரகுமாரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த ஏற்பாடு, நேரடியாக ஊழல் மற்றும் பொருளாதார முறைகேடுகளுக்கான தண்டனையிலிருந்து இலங்கை அரசாங்கம் விடுபடுவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்பாவி தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் கைகள் இரத்தத்தில் நனைந்திருக்கும் நேரத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு உயிர்நாடியை வழங்குவது நெறிமுறையற்றது மற்றும் அநீதியானது மட்டுமல்ல, சர்வதேச நாணய நிதியத்தின் மோசமான பொருளாதாரக் கொள்கையுமாகும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்;தின் பிரதானி தெரிவித்துள்ளார்.
இதேவேளை வங்குரோத்து நிலையில் உள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக கடன் வழங்கப்பட்டபோது இலங்கை அரசாங்கங்ளின் இராணுவமயமாக்கல் பிரச்சினையை உரியமுறையில் கையாளவில்லை.
தமிழர் தாயகத்தை இராணுவ மயமாக்குவதற்காக கொடுக்கப்பட்ட விலை அதிகம்.
அதேநேரம் வீண் செலவுகள், ஊழல் மற்றும் நாட்டின் சர்வதேச கடன்களை திருப்பிச் செலுத்த இயலாமைக்கு இராணுவ கட்டமைப்பும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்றும் நாடு கடந்த தமிழீழு அரசாங்கத்தின் பிரதானி விஷ்வநாதன் ருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்
000
இங்கிலாந்துக்கு சொந்தமான இந்து சமுத்திர தீவான டியாகோ கார்சியாவில் தற்கொலைக்கு முயற்சித்ததன் பின்னர், ருவாண்டாவிற்கு மாற்றப்பட்ட இரண்டு இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள், மூன்றாவது நாடு ஒன்றில் புகலிடம் பெறுவதற்கு இங்கிலாந்து அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை அன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என்று ஆவணங்களை கோடிட்டு வெளிநாட்டு செய்திச்சேவை ஒன்று தெரிவிக்கிறது
எனினும் மீள்குடியேற்றத்திற்கான மூன்றாவது நாடு இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
2021 அக்டோபரில் டியாகோ கார்சியாவுக்கு சென்ற முதல் 89 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களில் 22 வயதான ஹம்ஷிகா கிருஷ்ணமூர்த்தி, மற்றும் 22 வயதான அஜித் சஜித்குமார், ஆகிய இரு புகலிடக் கோரிக்கையாளர்களுக்கே இந்த வாய்ப்பை இங்கிலாந்து அரசாங்கம் வழங்கியுள்ளது.;.
இந்தநிலையில் எஞ்சிய 68 புகலிடக் கோரிக்கையாளர்களில், 26 வருட உள்நாட்டுப் போரின் போது சுதந்திரத்திற்காகப் போராடிய பிரிவினைவாதக் குழுவான தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு, இலங்கை பாதுகாப்புப் படையினரால் சித்திரவதை செய்யப்பட்டவர்களும் இருப்பதாக தெ ஹியூமனிட்டேரியன் என்ற செய்தித்தளம் கூறுகிறது.
இவர்களில் 50 க்கும் மேற்பட்டோர் தஞ்சம் கோரும் கோரிக்கைகளை இங்கிலாந்து அதிகாரிகளால் மதிப்பீடு செய்திருந்தாலும், பெரும்பாலானவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் நிராகரிப்பு கடிதங்களில் 'நீங்கள் இலங்கைக்கு திரும்புவதற்கு உத்தரவு வழங்கப்படும்' என்ற வரிகளை கொண்டிருப்பதாக செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இலங்கைக்கு திரும்பிச்செல்லப்போவதில்லை என்று கூறி அண்மைக்காலத்தில் 9 இலங்கையர்கள் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்ததாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில் அவர்களின் மூன்றாம் நாடு ஒன்றுக்கான கோரிக்கையும் பரிசீலிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 18 மாதங்களாக, புகலிடக் கோரிக்கையாளர்களின் குழுவினர், தீவில் உள்ள வேலியிடப்பட்ட முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர், அங்கு பலர் உணவு மற்றும் மருத்துவ சேவைகள் போதுமானதாக இல்லை என்றும், தகவல் தொடர்புகள் துண்டிக்கப்படுவதும் வழக்கமாக உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



