INR வர்த்தக விரிவாக்கத்தின் மூலம் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க இலங்கை மற்றும் இந்தியா திட்டம்

இலங்கையும் இந்தியாவும் நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சியின் முக்கிய தூணாக இருதரப்பு வர்த்தகத்தை, குறிப்பாக இந்திய ரூபாய் வர்த்தக விரிவாக்கத்தின் மூலம் மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து சிந்தித்துள்ளன.
இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநர் ஸ்ரீ சக்திகாந்த தாஸை புதன்கிழமை சந்தித்தபோது இந்த விடயம் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்திய அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளுடனான தனது தொடர்ச்சியான ஈடுபாட்டின் ஒரு பகுதியாக மகாராஷ்டிர மாநிலத்திற்கு இலங்கை தூதுவரின் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்கும் இலங்கை உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு மிகவும் சுமூகமான முறையில் இடம்பெற்றதுடன், இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இந்திய ரிசர்வ் வங்கியின் நேரடித் தலையீட்டால் உருவான பொருளாதார ஸ்திரத்தன்மை, குறிப்பாக நாணய மாற்று ஏற்பாடுகள் மற்றும் கொடுப்பனவுகளை ஒத்திவைத்தல் ஆகியவற்றின் பின்னணியில் இந்தியா இலங்கைக்கு அளித்து வரும் ஆதரவிற்காக மொரகொட ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நன்றி தெரிவித்தார்.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியை (EFF) நனவாக்க உதவியதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் .
ரிசர்வ் வங்கியின் ஆளுநரும் இலங்கை உயர் ஸ்தானிகரும் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் மின்சாரம், எரிசக்தி, துறைமுகங்கள், உள்கட்டமைப்பு, சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற துறைகளில் பொருளாதாரங்களை அதிக அளவில் ஒருங்கிணைப்பதன் மூலம் அதில் இந்தியா ஆற்றக்கூடிய முக்கிய பங்கு குறித்து விவாதித்தனர்.
மொரகொட, “இந்தியாவில் 2021/2023 இல் உள்ள இலங்கை இராஜதந்திர பணிகளுக்கான ஒருங்கிணைந்த நாட்டு மூலோபாயம்” என்ற தனது கொள்கை வரைபடத்தின் நகலை ஆளுநர் தாஸிடம் வழங்கினார்.
மேலும் , உயர் ஸ்தானிகருடன் மும்பையில் உள்ள இலங்கையின் தூதரக கலாநிதி வல்சன் வேத்தோடியும் கூட்டத்திற்கு வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது .



