அரச திணைக்களங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி

சிறிலங்காவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய அரச திணைக்களங்கள் பலவற்றை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இந்த மனுவைத் தொடர்வதற்கு உயர்நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று அனுமதி வழங்கியது.
மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பைக்கியசோதி சரவணமுத்து ஆகியோர், திறைசேரி செயலாளர், அரசாங்க அச்சக அதிகாரி, காவல்துறை மா அதிபர் மற்றும் பலரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
அரச அச்சகர் மற்றும் காவல்துறை அதிபர் ஆகியோரின் நடத்தை உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான ஒருங்கிணைந்த முனைப்பை சுட்டிக்காட்டுவதாக மனுதாரர்கள் தமது மனுவில் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் மனுதாரர்கள் மற்றும் இலங்கையின் குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு பாதகமானவையாகும்.
எனவே அரச அச்சகர், காவல்துறை மா அதிபர், நிதியமைச்சராக சிறிலங்காவின் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியோர் 19ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்துவதற்கு சட்டப்படி உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் மூலம் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கத் தவறியதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



