பலாலியில் இருந்து தென்னிந்தியா முழுவதும் விமான சேவை!

யாழ்ப்பாணம் (பலாலி) சர்வதேச விமான நிலையத்திலிருந்து தென்னிந்தியாவின் ஏனைய நகரங்களுக்கும் சேவையை விஸ்தரிக்க தீர்மானித்துள்ளோம். இதேபோன்று யாழ்பாணம் – கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்படுகிறது என்று யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெய பாஸ்கரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் யாழ்ப்பாணம் சர்வதேச விமானம் நிலையம் ஊடாக மேற்கொள்ளப்படும் யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவையூடாக பலர் நன்மையடைந்து வருகின்றனர். இந்தச் சேவையை எப்படி நீடிப்பது என்று ஆராய்ந்து வருகின்றோம். மேலும் யாழ்ப்பாணம் சர்வதேச விமானம் நிலையம் ஊடாக தென்னிந்தியாவின் ஏனைய நகரங்களுக்கும் சேவையை விஸ்தரிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். இது தவிர யாழ்ப்பாணம் – கொழும்பு விமான சேவையை ஆரம்பிக்கவும் ஆராய்ந்து வருகிறோம். இது தொடர்பான நல்ல செய்தி விரைவில் கிடைக்கும் என்றார்.



