காற்றாலை மின் திட்டங்களை 500 மெகாவோட்டாக உயர்த்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் அதானி குழுமம் கோரிக்கை

இலங்கையில் 340 மெகாவாட் காற்றாலை மின் திட்டங்களை அமைக்க அனுமதி பெற்றுள்ள இந்திய அதானி குழுமம், அங்கீகரிக்கப்பட்ட கொள்ளளவை 500 மெகாவோட்டாக உயர்த்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
எனினும் இந்த முன்மொழிவு பரிசீலனையில் உள்ளது என்று இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க, அதானி குழுமத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அதானி குழுமம், தமக்கு சொந்தமான 5.2 மெகாவோட் விசையாழிகளை இலங்கைக்குள் கொண்டுவரும் என்றும் அறியப்படுகிறது.
ஏற்கனவே இதன் முன்மாதிரி இந்திய குஜராத்தின் முந்த்ராவில் ஒரு வருடமாக சேவையில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சில இடங்களில் காற்றின் வேகம், போதுமானதாக இருப்பதால், 45 ஜிகாவோட் ஆற்றலை உற்பத்தி செய்யமுடியும்.
இந்தநிலையில் 2030 இல் இலங்கைக்கு மிகக் குறைந்த மின்சார அளவே தேவைப்படும் என்ற அடிப்படையில், பூட்டான் நீர்மின்சாரத்தை விற்பனை செய்வது போல, காற்றாலை மின்சார உற்பத்தியின் உபரியை இந்தியாவுக்கு இலங்கையால் விற்பனை செய்யமுடியும் அமைச்சர் சானக குறிப்பிட்டுள்ளார்.



