உலக ஜீவன்கள் அனைத்தும் உய்ய வழிமுறைகள் கண்டறிந்து உபாயம் கூறிய இடைக்காடர் சித்தர் வாழ்க்கை வரலாறு... (சித்தர்களின் இரகசியம் பாகம் - 05)

Reha
2 years ago
உலக ஜீவன்கள் அனைத்தும் உய்ய வழிமுறைகள் கண்டறிந்து உபாயம் கூறிய இடைக்காடர் சித்தர் வாழ்க்கை வரலாறு... (சித்தர்களின் இரகசியம் பாகம் - 05)

தமிழ்நாட்டில் வாழ்ந்த பல கோடி சித்தர்களில் பதினெட்டு சித்தர்கள் மிக முக்கியமாக போற்றப்படுகின்றனர். அதில் இடைக்காட்டுச் சித்தர் மிகக் குறிப்பிடத்தக்கவர்.

ஏனென்றால் அவர் அகத்திய மகரிஷியை மகா சித்தர் என்றும் பெரும் சித்தர் என்றும் அவருடைய குரு போக மகரிஷியால் அழைக்கப்பட்டார். ஏனெனில் ஏனைய சித்தர்கள் கலியுகத்தில் மனிதன் படும் துன்பங்கள் நீங்க வழிகளை அறிந்து அதற்குரிய வழிமுறைகளை கூறினார்கள். ஆனால் இடைக்காட்டூர் சித்தர் மட்டும் உலக ஜீவன்கள் அனைத்தும் உய்ய வழிமுறைகள் கண்டறிந்து உபாயம் கூறினார்.

இடைக்காடர் தொண்டை மண்டலத்தில் இடையன் திட்டு என்னும் ஊரில் இடையர் குலத்தில் நந்த கோனார் மற்றும் யசோதா தம்பதியினர்க்கு மகனாக பிறந்தார். இந்த ஊரானது தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடையன் மேடு என்று அழைக்கப்படுகிறது. இடைக்காடரின் பிறப்பைப் பற்றி போகர் மகரிஷி தனது சிஷ்யர் புலிப்பாணி சித்தரிடம் பாடிய பாடல்.

இடைக்காடர் பிறவியிலேயே ஞானம் கைவரப் பெற்று பல அற்புதங்களை நிகழ்த்தினார்.

இடைக்காடர் தனது குல தொழிலான ஆடு மேய்க்கும் தொழிலை செய்தாலும் அவரது சிந்தனைகள் அனைத்தும் ஆத்மாவை நோக்கி விண்வெளியில் ஒன்றர கலந்திருப்பார்.

இவ்வாறு இவரின் தவக்கோலத்தில் விண்நோக்கி அமர்ந்திருப்பை வான்வெளியில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த போக மகரிஷி இவரை காணும் ஆர்வத்துடன் இவர் முன்வந்து காட்சியளித்தார்.

இதனையும் வந்திருப்பவர் போகர் என்பதை அறியாமல் இடைக்காடர் அவரை வணங்கி அங்கிருந்த தர்ப்பை புல்லை சேகரித்து ஆசனமாக செய்து அவரை அமரச் செய்து ஆட்டின் பாலை கறந்து கொடுத்து உபசரித்தார்.

இவரின் விருந்தோம்பல் பண்பைக் கண்டு மகிழ்ந்து போகர் இவரை தனது சீடனாக்கி அவருக்கு ஞானம், மருத்துவம் மற்றும் வானசாஸ்திரம் ஆகியவற்றை பல நாட்கள் அங்கு தங்கிருந்து உபதேசித்து அருள்பாலித்தார்.

சில காலம் பின்பு போகர் அவரை விட்டு விடைபெறும் நேரம் வந்த பொழுது இடைக்காடர் கண் கலங்கினார். அப்பொழுது இடைக்காடருக்கு கலங்காதே உனக்கு அருளிய ஞானத்தை வைத்து உலகம் உய்ய வாழ்விக்க அருள்வாயாக என்று கூறி மறைந்தார்.

இவ்வாறு போகரின் அருளால் ஞானம் பெற்ற இடைக்காடர் தனது தவத்தாலும், ஞானத்தாலும் முக்காலத்தை உணர்ந்தார்.  தனது குருவின் சொல்படி மக்களுக்கு சேவை செய்ய உறுதி பூண்டார்.  அதன் பொருட்டு பல ஞானநூல்கள் எழுதினார். மனிதனின் துயரங்கள் அடிப்படையாக விளங்குவது மற்றும் நிலைக்களுக்கும் காலம் செயல்படுவதை கண்டறிந்து அதனை விளக்கு விதமான வருஷாதி என்னும் நூலை இயற்றினார். இப்பொழுது பஞ்சாங்கம் என அழைக்கப்படுகிறது.

இவர் தனது ஞான சிருஷ்டியால் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் கொடுமையான பருவ மாற்றத்தையும், அதனால் ஏற்படப் போகும் பஞ்சம், பசி மற்றும் பட்டினியை உணர்ந்து தனது சீடர்களுக்கும் மக்களுக்கும் எச்சரித்தார். ஆனால், அவர்களோ அதனை பொருட்படுத்தவில்லை. இருப்பினும், அவர் தன் பொருட்டு பட்டினியிலிருந்து தனது ஆடுகளை காக்க, எந்த பருவ மாற்றத்திலும் பாதிப்படையாமல் வளரும் எருக்கஞ் செடியை உணவாக கொடுத்தார். இதனை கண்ட மக்கள் இவருக்கு சித்தம் கலங்கிவிட்டது என்று எள்ளி நகையாடினர்.

ஆனால் இடைக்காடரோ தனக்கும் உணவு கிடைக்க, குறுந்தானியமான குருவரகு எடுத்து வந்து அதனை மண்ணில் சேற்றோடு கலந்து அவர் குடிலில் மண்சுவர் எழுப்பினார். இதன்மூலம், எருக்கஞ் செடியை உண்ணும் ஆடுகளுக்கு உடலில் தினமும் ஏற்படும் அரிப்பை போக்க மண் சுவர்களில் உடம்பை தேய்க்கும். அதன் மூலம் பஞ்ச காலகட்டத்தில் அதனை உணவாக வைத்து கொள்ளலாம் என எண்ணினார்.

அவர் எண்ணியபடியே, மக்களும் பஞ்சத்தினாலும், பட்டினியாலும் இறக்கத் தொடங்கினர். ஆனால் இடைக்காடரும் அவரது ஆடுகளுடன் எப்பொழுது போல் எவ்வித பாதிப்பின்றி நன்றாக உயிர் வாழ்ந்து வந்தனர். இதனை அறிந்த நவக்கிரக நாயகர்கள் ஆச்சர்யம் அடைந்து அதனை கண்ணூற காண விரும்பி இடைக்காடரின் மண்குடிலுக்கு வந்து சேர்ந்தனர். உலகையே ஆட்சி செய்கின்ற நவக்கிரக நாயகர்கள் தனது குடிசைக்கு வந்தமைக்கு இடைக்காடர் பெரும் மகிழ்ச்சியுடன் திகைத்து நின்று அவர்களை வரவேற்றார். அவர்களுக்கு ஆட்டுப் பாலுடன், குருவரகு கஞ்சியும் கொடுத்து உபசரித்தார். அவரின் உபசரிப்புக்கு மகிழ்ந்த நவக்கிரக நாயகர்கள் அவருக்காக உண்டனர்.

பின்னர் எருக்கஞ்செடிகளை தின்ற ஆடுகளின் பாலின் காரணமாக அதனை உண்ட அவர்கள் மயக்கமுற்று படுத்துறங்கினர். இதனை கண்ட இடைக்காடருக்கு சற்று ஒரு யோசனை தோன்றியது. நவக்கிரகங்களின் வேறுபட்ட நிலைகளால் தானே பஞ்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் உறங்கி கொண்டிருந்த நவக்கிரக நாயகர்களை பஞ்சம் நீக்குகின்ற ஒரு நிலையில் இடமாற்றி படுக்க வைத்தார். இதன்மூலம், அடுத்த கணமே, பூமியில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. மேகங்கள் சூழ்ந்தது பெரும் மழை பெய்தது பூமி குளிர்ந்தது வறட்சி நீங்க நீர் நிலைகள் மற்றும் குளங்கள் நிரம்பின. அனைத்து ஜீவராசிகளும், மனிதர்களும் மலர்ச்சியுடன் உயிர் பெற்றன. பஞ்சம் நீங்கியது.

பூமியில் ஏற்பட்ட திடீர் குளிர்ச்சியையும் மாற்றத்தையும் உணர்ந்த நவக்கிரக நாயகர்கள் உறக்கத்திலிருந்து கண் விழித்து எழுந்தனர். இது அனைத்தும் இடைக்காடரின் செயலாகத்தான் இருக்கும் என்று உணர்ந்து அவர்கள் அவரின் நுட்பத்தினையும், சகல உயிர்கள் மேல் அவர் கொண்ட அன்பையும் நினைத்து நெகிழ்ந்தனர். அதே நேரத்தில் இடைக்காடரோ கடுந்தவத்தில் ஆழ்ந்திருப்பதை பார்த்த அவர்கள் அவரை தொந்தரவு செய்ய மனமின்றி வாழ்த்தி இவரால் பூலோக மக்களுக்கு நன்மைகள் நிகழட்டும் என்று ஆசி வழங்கி மறைந்தனர்.

  • இடைக்காடர் சித்தர் திருவண்ணாமலையில் ஜீவசமாதி நிலை அடைந்தார்.
  • சிவகங்கை மாவட்டத்திலுள்ள இடைக்காட்டூரில் சித்தரின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை அன்று அபிஷேகம், ஆராதனை மற்றும் அன்னதானம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
  • புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரன்று சித்தருக்கு குரு பூஜையும் மாபெரும் அன்னதானமும் சீரும் சிறப்பாக ஸ்ரீ இடைக்காடர் சித்தர் ஞான புண்ணிய ஷேத்திரம் மூலம் நடைபெறுகிறது.