CTID விசாரணை? அழைப்பு அச்சத்தில் ஊடகவியலாளர் (வீடியோ இணைப்பு)

வன்னியைச் சேர்ந்த சர்வதேச புகழ்பெற்ற தமிழ் ஊடகவியலாளரை பயங்கரவாத பொலிஸார் காரணத்தை குறிப்பிடாமல் விசாரணைக்கு அழைத்துள்ளமைக்கு உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
தமிழ் ஆர்வலர்களுக்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு (CTID), முல்லைத்தீவைச் சேர்ந்த புகைப்பட ஊடகவியலாளர் கனபதிப்பிள்ளை குமணனை எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத விசாரணை பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளமை பல வருடங்களாக இடம்பெறும் துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்களின் அண்மைய சம்பவமாகும் என சட்டத்தரணியும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆளுநருமான அம்பிகா சற்குணநாதன் தனது X தளத்தில் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடக தர்மத்தின் அடிப்படையில் செய்திகளை வழங்கும் ஒரு ஊடகவியாலாளர் அச்சுறுத்தப்படுவதும் போலியான குற்றச்சாட்டுக்கு உள்ளாவதும் மிகவும் கண்டிக்கத்தக்கதென தன்னுடைய பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ள மக்கள் போராட்ட முன்னணியின் செயற்குழு உறுப்பினரான ராஜ்குமார் ரஜீவ்காந், இலங்கை அரசின் இந்த மோசமான அடக்குமுறைக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.
செம்மணி அகழ்வாய்வு விடயங்களை தொடர்ச்சியாக அறிக்கையிட்டு வரும் குமணனிடம் காணொளி நேர்காணல் ஒன்றை பதிவு செய்வது தொடர்பில் கோரிக்கை விடுத்தபோது அவருக்கு காணப்படும் அச்சுறுத்தல் மற்றும் கண்காணிப்பு காரணமாக அவரால் அந்த செவ்வியை வழங்க முடியவில்லை என இந்தியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் சாய்கிரன் கண்ணன் தன்னுடைய தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுத் தொடர்பில் குமணனுடனான தனது தனிப்பட்ட உரையாடல் குறித்த ஸ்கிரீன் சொட்டையும் (screen shot) அவர் பகிர்ந்துள்ளார்.
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அலம்பில் அலுவலகத்தில் ஒரு தொடர்ச்சியான விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னிலையாகுமாறு கனபதிப்பிள்ளை குமணனுக்கு கடிதம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



