யாழில் தேசிய விழிப்புணர்வு நிகழ்ச்சி: பிரமிட் திட்டங்களைத் தடுத்தல்!

பிரமிட் திட்டங்களில் ஈடுபடுவதால் ஏற்படும் பாதகமான பொருளாதார விளைவுகள் மற்றும் அவற்றின் பரவலைத் தடுக்கும் வகையில், அத்தகைய திட்டங்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதைக் குறித்து தேசிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று புதன்கிழமை (16) யாழ்ப்பாணம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது, தலைமையுரை ஆற்றிய அவர், ஜனாதிபதி செயலகம் மற்றும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய, ஜூலை 14 முதல் 18 வரை தேசிய விழிப்புணர்வு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதற்கமைய, மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களை ஒருங்கிணைத்து, பிரமிட் திட்டங்களில் ஈடுபடுவதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் மற்றும் அவற்றைத் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலக சிரேஷ்ட முகாமையாளர் கே. தர்மேந்திரா விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். அவர், பிரமிட் திட்டங்கள் பொதுமக்களை ஏமாற்றும் விதத்தில் செயல்படுகின்றன என்றும், அவற்றில் ஈடுபடுவதால் நிதிநெருக்கடி, சட்டப்பிரச்சினைகள் போன்றவை உருவாகலாம் என்றும் எச்சரிக்கை செய்தார்.
நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சிவகரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், உதவி மாவட்ட செயலாளர் உ. தாசினி, பதவிநிலை மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




