தேர்தல் செலவீனத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் தொடர்பில் கலந்துரையாடல்!

2023 ஆம் ஆண்டின் 03ம் இலக்க தேர்தல் செலவீனத்தை ஒழுங்கு படுத்தும் சட்டம் தொடர்பாக வடமாகாண ரீதியிலான தெளிவூட்டல் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் சிறீ ரத்நாயக்கா தலைமையில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் தேர்தல் ஆணைக்குழுவின் உயரதிகாரிகள், மேலதிக அரசாங்கதிபர்கள், ஐந்து மாவட்டங்களின் உதவித்தேர்தல் ஆணையாளர்கள், மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர், தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களைச் சேர்ந்தோர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார்.தாம் தேர்தலுக்கு எப்போதும் தயார் எனவும் அரசியலைப்பின் பிரகாரம் 2019ம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தல் நடைபெற்ற நிலையில் தற்போது ஜனாதிபதி தேர்தல் நடாத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.



