களமிறங்குகின்றாரா ரணில்! முன்னாள் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை முன்நிறுத்த வேண்டியது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உடனடித் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
"ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய கட்சிகளும் இணைந்து இந்த நாட்டை அபிவிருத்திப் பயணத்தில் கொண்டு செல்கின்றன. இது இலகுவான பயணமல்ல. இது ஒரு இருண்ட பயணம்.
எனினும் ஒருவித முன்னோக்கு பார்வையுடன் கூடிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு மக்களுக்கும் நாட்டுக்கும் மங்களகரமான ஆண்டாக இருக்கும் என்று நம்புகிறோம்."
“ஜனாதிபதி என்ற ரீதியில் ரணில் விக்கிரமசிங்க கட்சி சார்பற்றவராக செயற்பட வேண்டிய நிலை காணப்படுகின்றது. அவர் அனைத்து கட்சிகளுக்கும் பொதுவாக செயற்படுகின்றார்.
ஜனாதிபதி தேர்தலில் பலர் போட்டியிட விரும்புகிறார்கள். ஆனால் நாடு இக்கட்டான நிலையில் இருக்கும் போது, அதனை மீட்டெடுத்துச் செல்லக்கூடிய தலைவர்கள் சிலரே உள்ளனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.