மாலைத்தீவின் 8வது ஜனாதிபதியாக பதவியேற்ற முகமது மூயிஸ்

மாலைத்தீவின் 8ஆவது ஜனாதிபதியாக முகமது முய்சு நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்ட நாடான மாலைத்தீவில் ஜனாதிபதியாக தேர்தல் நடை பெற்றது.
ஜனாதிபதியாக இருந்த இப்ராஹிம் முகமது சோலிஹ் மற்றும் எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரசின் முகமது மூயிஸ் ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் யாருக்கும் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் தேர்தல் நடந்தது.
இதில் 53 சதவீத ஓட்டுகள் பெற்று மூயிஸ் வென்றதாக கடந்த அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. எதிர்த்துப் போட்டியிட்ட சோலிஹ் 46 சதவீத ஓட்டுகளைப் பெற்றார். இந்நிலையில் நேற்று மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக முகமது மூயிஸ் பதவியேற்றார்.
துணை ஜனாதிபதியாக ஹுசைன் முகமது லத்தீப் பதவியேற்றுக் கொண்டார்.
“நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளிப்பேன். மாலைத்தீவில் எந்தவொரு வெளிநாட்டு இராணுவத்துக்கும் இடம் அளிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என பதவியேற்பு நிகழ்வின் போது முகமது மூயிஸ் தெரிவித்தார்.



