40 கனடா தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் இந்தியா

கனடா தூதரகத்தின் அதிகாரிகள் 40 பேரை இந்தியா வெளியேற்றப்போவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவுக்கும் கனடாவுக்கு இடையே மிகப்பெரும் மோதல் இடம்பெற்று வரும் நிலையில் 40 கனேடிய தூதரக அதிகாரிகளை திரும்பப்பெறுமாறு கனடாவிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதிக்கு இடையில் அவர்கள் வெளியேறவில்லை எனின் அவர்களது பொறுப்பை நீக்கிவிடுவோம் என இந்தியா தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் மொத்தம் 62 கனடா அதிகாரிகள் காணப்படும் நிலையில் அவர்களது எண்ணிக்கையை 41 ஆக குறைக்க வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக முனவைக்கப்பட்ட குற்றச்சாட்டின் காரணமாக இந்திய மற்றும் கனடாவுக்கான உறவு மோசமாகியது.
தற்போது 40 கனடா அதிகாரிகளை இந்தியா வெளியேற்றவுள்ளமை மேலும் குறித்த இரு நாடுகளுக்கான உறவில் விரிசலை உருவாக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்திய அரசாங்கம் இது குறித்து எந்தவித உத்தியோக பூர்வ அறிவித்தலையும் வெளியிடவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.



